Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 30, 2011

தவறுகள் அதிகமாகும் மனச்சோர்வு ஆய்வில் !

சோர்வு அதிகமாகின்ற போது மனிதன் தன்னை அறியாமலேயே தவறுகளைச் செய்கின்றான். மூளையின் பெரும் பகுதி விழித்துள்ள நிலையிலும் ஒரு சிறு பகுதி கண் இமைக்கும் நேரம் சோர்வடைதால், ஞாபகத்தோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளின் மூளைச் செயற்பாட்டை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். பகல் நேரத்தில் எலிகளை விழித்திருக்கச் செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக பகல்பொழுதில் எலிகள் தூங்குவது தான் வழக்கம்.

இந்த வேளையில் எலிகளின் மூளையில் பெரும்பகுதி சுறுசுறுப்பாக இருந்தாலும், அது விழித்துள்ள நிலையிலும் கூட ஒரு சிறு பகுதி உறக்கம் கொள்கின்றது. இவ்வாறு அவற்றை நீண்ட நேரம் விழித்திருக்கச் செய்கின்ற போது மூளையின் அநேக கலங்கள் ஓய்வெடுக்கின்றன. இதை மூளையின் குட்டித்தூக்கம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது எலிகளின் செயற்பாட்டை குறிப்பாக சில விடயங்களில் கவனம் செலுத்தும் ஆற்றலைப் பாதிக்கின்றதா என்றும் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். எனவே மனித மூளையில் ஏற்படும் இலேசான சோர்வு சில சிறிய தவறுகளுக்குக் காரணமாகின்றன என்பது தான் ஆய்வாளர்களின் முடிவாகும்

மக்களை அச்சுறுத்தும் பூச்சிகொல்லி!! தடை வருமா?

இன்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக் கொல்லிகளில் "என்டோ சல்பான்' முக்கிய இடத்தை வகிக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. விவசாய நிலத்தில் சாறு உறிஞ்சும் புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த பயிர்களின் ஆரம்ப நிலையில் என்டோ சல்பான் தெளிக்கப்படுகிறது. இது குளோரின் கலந்த ஹைட்ரோ கார்பன் மற்றும் கரிம சல்பைட். பல்வேறு வணிகப்பெயர்களில் விற்கப்படுகிறது.

கேரளா மாநிலம் காசர்கோடு முழியார், பெல்லூர் பகுதியில் 4700 ஏக்கரில் பயிரிடப்பட்ட முந்திரி தாவரங்களின் மீது என்டோ சல்பான், ஹெலிகாப்டர் மூலம்தெளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு சுற்றுப்புற கிராமங்களில் பலர் பலியானார்கள். அங்கிருந்த பலர் சுவாச பாதிப்பு, அலர்ஜி, வாந்தி, தலைவலி, கை, கால் வலிப்பு, திருகிய கால்கள், தசை வளர்ச்சி குன்றுதல், புற்று நோய், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கிராம மக்களின் ரத்தத்தை பரிசோதித்த போது, நீரில் கரைந்துள்ள என்டோ சல்பான் அளவைக் காட்டிலும் பல நூறு மடங்கு என்டோ சல்பானின் பங்கு ரத்தத்தில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் குடல் புற்று நோய்கள், பெண்களை பாதிக்கும் நோய்கள், இனப்பெருக்க வளம் குன்றல், கருச்சிதைவுகள், ஹார்மோன் பிரச்னைகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பூச்சிக் கொல்லியை நாடு முழுவதும் தடை செய்யக்கோரி கேரளாவில் தினந்தோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பந்த் நடந்தது. முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம் நடத்தினார். பல்வேறு நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளது. 1999 ல் இருந்து ஹாலந்து, ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், வங்கதேசம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் நாடுகள் முற்றிலுமாக தடை செய்துள்ளது. இந்தியாவில் பருவ காலங்களில் ஒரு கோடி லிட்டர் என்டோ சல்பான் பயன்படுத்தப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளிநாடு செல்ல பயப்படும் போர் குற்றவாளிகள்?

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஐ.நா. வல்லுநர் குழு அம்பலப்படுத்தியதையடுத்து, ராஜபக்சே உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர தயாராகி வருகின்றனர்.

இதனால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மூத்த சட்ட வல்லுநர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, போர்க்குற்றம் அடிப்படையில் கைது செய்யப்படலாம் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு மூடி மறைத்த ரகசியம், 14 ஆண்டுகளுக்குப்பிறகு?

புதுடெல்லி : 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன.

லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது. இந்திய எல்லையை விட்டு வெளியேறிய இந்த விமானம் சில நாள்கள் கழித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது, இந்திய விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி மும்பையில் தரையிறங்க வைத்தனர்.

அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் பிளீச், டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டேவி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“ஆனந்த மார்க்கம்’ என்கிற அமைப்பு இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குற்றம்சாட்டவர்களில் சிலர் சுதந்திரமாக இருக்கின்றனர். சிலர் தலைமறைவாகிவிட்டனர்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிம் டேவி தொலைக்காட்சி ஒன்றுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், “இந்தப் பணியைச் செய்ததில் எம்.பி.ஒருவரே தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும், வேலை முடிந்ததும், அவரே தங்களை நேபாள எல்லையில் கொண்டுபோய் விட்டதாகவும்” கூறினார்.

மத்திய அரசு, இந்தியாவின் ரா உளவு அமைப்பு, பிரிட்டனின் எம்ஐ-5 உளவு அமைப்பு ஆகியவற்றுக்குத் தெரிந்தே இது நடந்ததாகவும், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராகப் போராடுவதற்காக மக்களுக்கு ஆயுதம் வழங்கவே விமானத்தில் இருந்து ஆயுதங்கள் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கமலின் லொள்ளுக்கு கோடிகள் கேட்ட தமன்னா!!

கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ‌காமெடி படம் ‌ஒன்றை இயக்க போகிறார்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டாராம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் கமல் படம் என்றால் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. இந்தபடத்தில் அதுபோன்ற காட்சிகள் ஏதும் உள்ளதா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வர, முதலில் சற்று தயங்கிய தமன்னா பிறகு ஓ.கே., சொன்னாராம். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டாராம். படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை ரூ.1.25கோடியாக கேட்டாராம். தமன்னாவின் இந்த கண்டிசனை கேட்டதும் அதிர்ந்து போய் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும்.

Friday, April 29, 2011

அடுத்த முதல்வரும் கருத்து கணிப்பும், மு.க பதில்?

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை மற்றொரு தனியார் தொலைக்காட்சி இப்போது வெளியிட்டுள்ளது. இந்தக் கணிப்பில், திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகளில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால் தொடர்ந்து அடுத்தடுத்து பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

திமுக என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கத்தின் மீது மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்து இருக்கின்றது. நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது. தேர்தல் முடிவுக்குப் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப திமுக முடிவெடுக்கும்.

கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல; கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது. ஆட்சிக்கு வந்தால் நான் முதல்வராக வருவேனா? அல்லது ஸ்டாலின் முதல்வராக வருவாரா? என்றெல்லாம் இப்போதே கூற முடியாது. அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் என்றார்.

கோத்தாபய மீது போர் குற்றங்கள் தொடர்பு, அமெரிக்கா!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது.

தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கின்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அதே நேரம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக நிபுணர் குழு அறிக்கையின் விடயங்கள் தொடர்பில் அவரிடம் விசாரணையொன்றை மேற்கொள்ள அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (Department of Homeland Security) மற்றும் சட்டத் திணைக்களம் (Department of Justice) ஆகியன தீர்மானித்துள்ளன.

அது மாத்திரமன்றி அமெரிக்காவிலுள்ள மனித உரிமை அமைப்புகள் பலவும் தமது நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரைக் கைதுசெய்து விசாரிக்குமாறு கோரும் மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுநீரக, கல்லையும் கரைக்கும் வாழைத்தண்டு

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும்.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Thursday, April 28, 2011

ஜெயலலிதாபோல் ஒழியமாட்டார் சட்டத்தின் முன்? மு.க!

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெயரால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உறவை முறித்துக்கொள்ள மாட்டோம் எனவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் மு.கருணாநிதி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகளும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழியை குற்றவாளியாக சேர்த்திருப்பது கவலைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும், மகள் மற்றும் கட்சி நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என கருணாநிதி தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.

வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஜெயலலிதா அல்ல என தெரிவித்த கருணாநிதி,சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா?. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

கோடா நாட்டுக்கு சிக்னல் கிடைக்காத, விஜய்!!

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் ’’வேலாயுதம்’’. இப்படத்தின் 80சதவீத சூட்டிங் முடிவ‌டைந்த நிலையில், மீதி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் பிறந்தநாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது. மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. வெற்றி பெற்ற அணி நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப்பற்றியே நினைக்க மாட்டார் ஜெயலலிதா. அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் ஜெயலலிதா இந்த விழாவில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறிதான்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஒபாமா!

வாஷிங்டன் : நீண்ட கால சர்ச்சைக்குபின்னர் அமெரிக்க அதிபர் ஓபாமா தன்னுடைய பிறந்த இடம குறித்த தகவலை அளித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுகட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார்.

இருப்பினும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் அதிபரின் சந்தேகங்கள் எழுப்பி வந்தன. இந்நிலையில் வரும் 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த சான்றிதழை வெளியிட்டார். அதில் ஹவாய் தீவின் ஹோனோலுநகரில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி பிறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர்கட்சிகளின் போரட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் டான் பெபியர் தெரிவித்தார்.அதிபர் பதவி மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் அமெரிக்க பிரஜையாக இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.

Wednesday, April 27, 2011

புதிய பயிற்சியாளர் தேர்வு, இந்திய கிரிகெட் அணிக்கு

மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வுபெற்றார். இதையடுத்து டங்கன் பிளெட்சர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக தொடர்வதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

மும்பையில் புதன்கிழமை பிசிசிஐ கூட்டத்தின்போது பிளெட்சரை பயிற்சியாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் டங்கன் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்வாரா என்பது தெரியவி ல்லை என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள எரிக் சிம்மன்ஸ் தொடர் ந்து பணியாற்றுகிறார்.

பிசிசிஐ கூட்டத்தின்போது புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் டங்கன் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டங்கன் பிளெட்சர் 2008-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது. 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக இருந்தவர் பிளெட்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்மிசத்துக்கு செருப்படி?

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் 3 கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவிகள் இருக்கையின் முன் பகுதிக்கு சென்றாலும் அந்த நபர் விடாமல் தனது சில்மிஷத்தை அரங்கேற்றி வந்தார். அந்த நபரின் சில்மிஷம் அதிகமானதால் அந்த 3 மாணவிகளும் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர். ஆனாலும் அந்த நபர் அந்த இருக்கை அருகே சென்றும் அந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்தார்.

மாணவிகள் அவரை முறைப்பார்த்து திட்டினர். ஆனாலும் அந்த நபர் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அத்துமீறலில் இறங்கியுள்ளார். பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது 3 மாணவிகளும் கீழே இறங்கி கொண்டனர். அந்த நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அந்த நபரை 3 மாணவிகளும் சுற்றிவளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த மாணவிகளிடம் ஏன் அடிக்கீறிர்கள் என்றனர். அப்போது நடந்த விபரங்களை மாணவிகள் கூறியதும், அருகில் இருந்த பஸ் பயணிகள் அனைவரும் சேர்ந்து தாக்க தொடங்கினர். வலி தாங்க முடியாத அந்த நபர் தான் போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டே அவர்களிடம் இருந்து தப்பி தர்மபுரி பஸ்நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் ஓடி ஒளிந்தார்.

இதையடுத்து 3 மாணவிகளும் தங்களது செல்போனில் அந்த சில்மிஷ போலீஸ்காரரை போட்டோ எடுத்தனர். மேலும் உன்னை சும்மா விட மாட்டோம் போலீசில் உன்மீது புகார் கூறுகிறோம் என்றனர். இந்த சம்பவம் காரணமாக பஸ்நிலையம் முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் பஸ்நிலைய தாதாக்கள் சிலர் அந்த மாணவிகளை பார்த்து நீங்கள் படிக்கின்ற மாணவிகள் போலீசில் புகார் செய்தால், உங்கள் படிப்பு வீணாகி விடும். போய் விடுங்கள், இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அந்த மாணவிகளை புகார் கொடுக்க விடாமல் அனுப்பி வைத்தனர்.

போர் குற்றவாளிக்கு எதிரான மறு விசாரணை? நவநீதம் பிள்ளை

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2009ம் ஆண்டு ஜனவரி முதல், மே மாதம் வரை கடுமையான சண்டை நடந்தது. இந்த சண்டையில் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், நிவாரணப் பொருள் வழங்கும் பகுதிகளிலும், மருத்துவமனைகள் மீதும் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அப்பாவி மக்கள் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா., நிபுணர் குழு இரண்டு நாட்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் நவநீதம் பிள்ளை. இவர், சர்வதேச கோர்ட்டின் நீதிபதியாக பணியாற்றியவர்.

மண்டேலாவை ஆங்கில அரசு சிறையில் அடைத்த போது, அவரை பார்க்க அவரது வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்காக வாதாடி, மண்டேலாவை அவரது வக்கீல்கள் சந்திக்க ஏற்பாடு செய்தவர் நவநீதம் பிள்ளை. தற்போது, சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவராக உள்ளார். "இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளதாக ஐ.நா., நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் பேரில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா., குழு அளித்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மறு விசாரணை தேவைப்படுகிறது. இந்த விசாரணை பாரபட்சமில்லாமல் சுதந்திரமான முறையில் முழுமையானதாக இருக்க வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார்.

Tuesday, April 26, 2011

ஓட்டு எண்ணிக்கை துவக்கம்

திண்டுக்கல் : ஓட்டு எண்ணிக்கையை மே 13ம் தேதி காலை 7.30 மணிக்கு துவங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த 13ல் பதிவான ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

தொகுதி தேர்தல் அதிகாரி (ஆர்.ஓ.,) முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு எண்ணிக்கை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தபால் ஓட்டுக்களை காலை 7.30 மணிக்கு துவங்க வேண்டும். காலை 8 மணிக்குள் எண்ணிக்கை முடியாத பட்சத்தில், இப்பணியை உதவி தேர்தல் அதிகாரியிடம் தர வேண்டும்.

மிஷின்களில் பதிவான ஓட்டுக்களை காலை 8 மணிக்கு தேர்தல் அதிகாரி துவங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்க ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தற்போது, காலை 7.30 மணிக்கு எண்ணிக்கை துவங்க ஆலோசனை தரப்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்கள் முதலில் எண்ணப்படுகின்றன' என்றார்.

தொ(ல்)லைகாட்சியால் இதய பாதிப்பு? அதிர்ச்சி ரிப்போர்ட்!!

தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டு விட்டு உணவு கொடுக்கின்றனர்.

இதன் விளைவு இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.

3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி, ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.

இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.

அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Monday, April 25, 2011

தேர்தல் முடிந்தும் தேர்தல் அதிகாரியை சந்திக்கும், பிரபலங்கள்!!

சென்னை : தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதன் மூலம், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பது, நிரூபணமாகியுள்ளது.

தேர்தலின்போது, ஓட்டுப்பதிவு விவரங்களை பூர்த்தி செய்ய படிவம், "17சி' வழங்கினர். மே 13ம் தேதி, ஓட்டு எண்ணிக்கையை துவங்குதவற்கு முன், "17சி' படிவத்தில் உள்ள புள்ளி விவரங்களை, சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஒரு சுற்றுக்கு 14 டேபிள்களில் எண்ணப்படும். அனைத்து டேபிள்களிலும் எண்ணி முடித்தபின், முதல் சுற்று ஓட்டு விவரங்களை அறிவிக்க வேண்டும். அதன்பின், இரண்டாவது சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற சில கோரிக்கைகளை, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம். அதை, அவர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

அ.தி.மு.க., சார்பில், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரும், நேற்று பிரவீன்குமாரை சந்தித்தனர். ஆனால், சந்திப்பு குறித்து, எந்தவிதமான கருத்துக்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஏற்ற தாழ்வு பெண் பாலினம் பிறப்பா, கள்ளிப்பாலா..?

கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகை 121 கோடி என, தெரியவந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 18 கோடி அதிகரித்திருக்கிறது.மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது. அதேசமயம் புள்ளிவரங்களின் மற்றொரு பகுதி ஜீரணிக்க முடியாத கசப்பைத் தருகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஆண், பெண் பாலின விகிதம் 1000:940 ஆக இருக்கிறது. இந்த விகிதம் கடந்த 2001ல் 1000:933 ஆக இருந்தது.

ஆனால், ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, அதே வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகப்பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த 1961ம் ஆண்டில் 1000:978 என்ற விகிதத்திலும்; 2001ல் 1000:927 ஆக இருந்த சிறுவர், சிறுமியரின் பாலின விகிதம் தற்போது 1000:914 என்ற அளவை எட்டி இருக்கிறது. ஆறுவயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையே 15.88 கோடிதான். இது 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 50 லட்சம் குறைவு.சிறுமிகளின் எண்ணிக்கை இந்த அளவு குறைந்திருப்பது, எதிர்காலத் தலைமுறைக்கு சமூக உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். திருமண உறவுகளில் இந்த விகிதாச்சாரம் எதிரொலிப்பதால், வருங்கால தலைமுறை சமூக உறவுகளில் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் ஏற்படும்."பாலின விகிதம் இப்படிச் சரிந்தால், ஒரு தலைமுறையே ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் அபாயம் இருக்கிறது' என்ற மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவின் கருத்து, முகத்தைச் சுளிக்க வைப்பதாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

இளம் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, அவர்களின் திருமணத்துக்காக செலவிடப்படும் தொகை, ஆண் குழந்தை வாரிசுரிமை மோகம் போன்றவை பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டதற்கு காரணம். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தானாக குறையவில்லை; குறைக்கப்பட்டிருக்கிறது.பெண் சிசுக்கொலை குறைந்திருக்கிறது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை நகரங்களில் இன்னும் தாரளமாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

ஆண், பெண் பாலின விகிதத்தில் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு துரித நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பெண் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்க, கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டும். பெண் சிசுக்கொலை மீதான கண்காணிப்பை மேலும் இறுக்க வேண்டும். கலாசாரத்தில் சிறந்த நாடு, நதிகளுக்கும், நிலத்துக்கும் பெண் பெயரைச் சூட்டி பெருமிதம் கொள்ளும் நாடு என வெற்றுப் பரப்புரைகள் இனி உதவாது. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் அதிகரிக்கப்பட்டு, பெண் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்.

கடவுளுக்கு மரணம் உண்டா? சிந்தனைக்கு!!

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ நாட்டின் தலைவரோ அல்ல. ஆனால் அவர்களுக்கு ஈடான ஒரு மதிப்பை இவர் பெற்றார், ஆன்மீகத்தின் காரணமாக. கடவுள்களுக்கு குறைவில்லாத இந்த தேசத்தில் கடவுளின் அவதாரங்களுக்கும் குறைவில்லை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் பணம், மானம், உயிர் என எதையும் சூறையாடுவதற்கு இந்த அவதாரங்களும் சாமியார்களும் தவறவில்லை. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை பல ஆனந்தாக்கள் வந்தாலும் மக்கள் திருந்தியபாடில்லை.

சாய்பாபாவிடமும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பதினான்காவது வயதில் ஷீரடி சாய்பாபாவின் அவதாரமாக தன்னை தானே முடிசூட்டிக்கொண்டார். விபூதி முதற்கொண்டு கைக்கடிகாரம் வரை மந்திர சக்தி மூலமாக வரவழைத்த இவரின் தந்திரத்தை பலரும் போட்டுடைத்தனர்.

1993ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் காவல்துறையினரால் இவரின் நெருங்கிய வட்டத்தை சார்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எதற்காக கொல்லப்பட்டனர்? மர்மம் இன்னும் நீடிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகளும் இவர் மீதுண்டு. இருந்தபோதும் இவரின் புகழுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித குறையுமில்லை. சாமான்ய மக்கள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரும் இவரின் பக்தர்கள். பெரியாரின் பகுத்தறிவு பாசறையிலும் அண்ணாவின் வழிகாட்டுதலிலும் வந்ததாக கூறிக்கொள்ளும் கலைஞர் இவருக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுத்தார். இவரின் குடும்பத்தினர் பாபாவின் பக்தர்கள்.

இவை ஒரு புறம் என்றால்,போலி ஆன்மீகத்தை மக்கள் இனியாவது உணர்வார்களா என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது. தான் 94 வயது வரை உயிர் வாழ்வேன் என்றும் அதற்கு முன் அடுத்த சாய்பாபாவை அறிவிப்பதாகவும் சாய்பாபா தெரிவித்திருந்தார். கடவுளின் அவதாரம் என்று கூறியவருக்கு தான் இந்த உலகை விட்டு பிரியப்பபோகும் நாளை.. இல்லை.. வருடத்தை கூட அறியும் சக்தி இல்லை என்பதை தற்போது அனைவரும் அறிந்துள்ளனர்.

மரணத்தை வென்றவர் எவரும் இல்லை. மரணம் தங்களை அழைத்து செல்லும் நேரத்தையும் எவரும் அறிவதில்லை. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று உறுதியுடன் கூறிய காந்தியடிகளையும் ‘எனக்கு மரணமே கிடையாது’ என்று கூறிய யாகவா முனிவரையும் இதே பூமியில் தான் நாம் கண்டோம். இறுதியில் வென்றவர் யார் என்பதையும் நாமறிவோம். நிச்சயம் சம்பவிக்க கூடிய மரணத்தை மனித மனம் ஏனோ ஏற்க தயங்குகின்றது.

நித்திய வாழ்வும் நீடித்த ஆயுளும் வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. இது மனித இயல்பு. மனிதனை படைத்த இறைவனை இந்த நித்திய வாழ்வை வைத்தே உள்ளான். மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை பெரும்பான்மையான மதங்கள் கூறுகின்றன.

இஸ்லாம் இதனை தெளிவாக கூறுகின்றது. இந்த உலக வாழ்க்கை பயிர் செய்யும் ஒரு பூமியே. இதற்கான அறுவடையை மனிதன் மரணத்திற்கு பின் வரும் மறுமை என்ற வாழ்க்கையில்தான் மேற்கொள்ள முடியும். இவ்வுலகில் மனிதன் நல்லறங்களை செய்தால் சுவனத்தை அடைவான், தீயறங்கள் புரிந்தால் நரகத்தில் புகுவான். சுவனமோ, நரகமோ இரண்டுமே நிலையான வாழ்க்கைதான். ஆக தன்னை படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு, நல்லறங்கள் புரிந்து வாழ்ந்தால் மனிதன் நிச்சயம் சுவனத்தில், ஒரு நிலையான வாழ்க்கைக்காக பிரவேசிப்பான். இந்த நிலையான வாழ்க்கையை அடைய அவன் நிச்சயம் மரணிக்க வேண்டும். ஆனால், மரணம் முற்றுப்புள்ளி அல்ல… உன்னல், உடுத்தல், மலஜலம் கழித்தல், உறக்கம், மரணம் இதை செய்பவர் எப்படி கடவுளாக முடியும்?

-ஏர்வை ரியாஸ்

ராஜாவை தொடர்ந்து, கனிமொழியும் கைதா?

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை சேர்க்க வேண்டும். தயாளுவின் பெயர் இடம் பெறாதது ஆச்சர்யமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Saturday, April 23, 2011

எதிலாவது நாம (தமிழகம்) உருப்பட்டிருக்கோமா? இதை தவிர!!

யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, "சரக்கு' விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது.

அந்த, "சாதனை' வரலாறு இது: தமிழகத்தில் தற்போது மொத்தம், 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு, 29 கடைகள். இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (பொதுவாக "குடிமகன்'களால், "ஹாட்' என அழைக்கப்படுவது), பீர்களும் விற்கப்படுகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மது விற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு பெருந்துணையாக இருப்பது, "டாஸ்மாக்' மூலம் கிடைக்கும் வருவாய் தான். நலத்திட்டங்கள் குறைவற நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனாலோ என்னவோ, ஆண்டுதோறும் விற்பனையும் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கடந்த, 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 13 ஆயிரத்து, 853 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010 - 11ம் ஆண்டில் இந்த விற்பனை, 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதன் மூலம், ஓராண்டில் சரக்கு விற்பனை, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ஐ.எம்.எப்.எல்., விற்பனை, 4 கோடியே 8 லட்சம் பெட்டிகளில் இருந்து, 4 கோடியே 78 லட்சம் பெட்டிகளை எட்டியுள்ளது. இது 17 சதவீதம் அதிகம். பீர் விற்பனை 2 கோடியே 42 லட்சம் பெட்டிகளில் இருந்து, 2 கோடியே 70 லட்சம் பெட்டி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, 11 சதவீதம் உயர்வு. அதற்குள் அயர்ந்துவிட வேண்டாம். இன்னும் சில, "கிக்'கான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.

"கேஸ்' எனப்படும் ஒரு பெட்டி சரக்கை, 40 பேர் குடிக்கலாம். அந்த வகையில், 2009-10ல், சராசரியாக ஒரு நாளைக்கு, 63 லட்சம் பேர் குடித்தனர்; ஆம்! ஒரு நாளைக்கு, 2010-11ல், அதே ஒரு நாளைக்கு குடித்தவர்களின் எண்ணிக்கை, 75 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இன்றைய தேதியில், ஒரு மணி நேரத்துக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து, 500 பேர் குடிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும், 5,208 பேர் குடிக்கின்றனர். இது, 24 மணி நேரத்துக்கான சராசரி தான். "மப்'பில் மல்லாந்து விட்ட நேரம், கடை மூடியிருக்கும் நேரத்தைக் கழித்தால், "குடிமகன்'களின் அடர்த்தி இன்னமும் அதிகரிக்கும். அப்புறமென்ன? சியர்ஸ்!

அறிமுகம் ஆன்லைனில், சிலிண்டர் புக்கிங்!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் கியாஸ் உள்ளது. சமையல் கியாஸ் கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

கியாஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கியாஸ் தீர்ந்து விடும். எப்போது போன் செய்தாலும் “பிசி”யாக இருப்பதால் சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பதிவு செய்வதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. அதனால் கியாஸ் ஏஜென்சிக்கே நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் சமையல் கியாஸ் பெறுவதற்கு படக்கூடிய பல்வேறு சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் கியாஸ் புக்கிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாக இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து இலக்க எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும். இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக அழுத்தி நடைமுறைப் படுத்தவேண்டும்.

தமிழ் வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம். தாங்கள் விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. கியாஸ் வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் கியாஸ் பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை கியாஸ் ஏஜென்சிகள் வழங்கி வருகிறார்கள். இந்த திட்டம் சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

உடல் எடையை குறைக்க சில வழிகள்

கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும்.

காலையில் இதை அருந்தும் பழக்கம் உள்ள ஆண், பெண் அகிய இரு பாலாருள் மூன்றில் ஒருவர் பகல் நேரம் ஆகின்ற போது, ஏனையவர்களை விட பசி உணர்வு குறைந்தவர்களாகவே காணப்பட்டனர்.

உடல்பருமன் தொடர்பான ஒ.பே.சி.டி என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய பானத்தை அருந்துவதன் மூலம் இடையில் நொருக்குத் தீனிகளும் தேவைப்படாது.

உடல் பருமனைக் குறைப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகள் பல உள்ளன. ஆனால் அவற்றை யாரும் பின்பற்றாமல் இருப்பது தான் பிரதான பிரச்சினை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

என்று நிறுத்தப்படும் மூட பழக்கவழக்கம்??

முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், பிரபல நடிகர் என்ற பட்டியலி்ல் இருக்கும் நடிகர் ஜீவா நடித்திருக்கும் புதிய படமான கோ, நேற்று ரீலிஸ் ஆனது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பால்குடம் தூக்கி, அபிஷேகம் செய்தனர்.

சென்னை வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரில் கோ படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், முன்னதாக மேளதாளம் முழங்க, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாசலில் கட்டப்பட்டிருந்த ஜீவா கட்-அவுட் மீது தாங்கள் குடங்களில் கொண்டு வந்த பாலை ஊற்றி, வழக்கம்போலவே தலைவர் வாழ்க... என்ற ‌கோஷத்துடன் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.

தங்கள் தலைவர் நீண்ட நாள் வாழ வேண்டும்; அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவது ரசிகர்களின் இயல்புதான். அதில் தவறேதும் இல்லை. ஆனால் புனிதமான பொருளாக கருதப்படும் பாலை கட்-அவுட் (சாமியையும் சேர்த்து)மீது ஏன் ஊற்ற வேண்டும்? தலைவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்று ரசிகர்கள் சொன்னாலும், அந்த பாலை ஒருவேளை பால்கூட கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்பதை உணர மறுப்பது ஏன்? ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம்.. என்பது ரசிகர்கள் புரிந்து கொள்வது எப்போது?

தங்கள் கட்-அவுட்டின் மீது பால் அபி‌ஷேகம் செய்வதை ஊக்குவிக்கும் தலைவர்கள், நடிகர்கள் இருக்கும் வரை ரசிகர்கள் திருந்துவார்களா என்ன? இதுபோன்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க யாராவது முன்வருவார்களா? கட்-அவுட்டுக்கு ஊற்ற பயன்படுத்தப்படும் பாலை கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் முன்வருவார்களா?

Friday, April 22, 2011

தோனிக்கு, உலகில் 52 வது இடம், டைம்ஸ்?

நியூயார்க் : நியூயார்க்கில் இருந்து வெளியாகும் டைம் வார இதழ் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு 52-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது விளையாட்டு வீரர் தோனி. கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சச்சின் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 87-வது இடத்திலும், ஆர்ஜென்டீனாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 88-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டைம் இதழில் கூறப்பட்டிருப்பதாவது, தோனி, இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார். பணிவான குணம், பதற்றமில்லாமல் நம்பிக்கையோடு விளையாடுவது ஆகியவற்றாலேயே அவரை அனைவரும் விரும்புகின்றனர்.

அவரின் திறமை பிரமிக்க வைக்கிறது. இந்தியாவில் சாதனை படைத்தவர்கள் எல்லாமே மிகப்பெரிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் தோனி இவை எதுவும் இல்லாமல் சிறிய நகரில் இருந்து வந்த தனது திறமை ஒன்றால் மட்டுமே சாதித்தவர்' என்று எழுத்தாளர் சேதன் பாகத் தெரிவித்துள்ளார்.

தோனி கிரிக்கெட் அணிக்கு தலைமை மட்டும் வகிக்கவில்லை. நம்பிக்கையான கேப்டன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அவர் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்ததோடு, வெற்றிபெறுவதையும் கற்றுக்கொடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6 கோடி தமிழக தமிழர்கள் செய்யாததை, 3 லட்சம் அயலக தமிழர்கள் செய்து முடித்தனர்!

நான் ஒரு அதிபர்...என்னை என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் இங்கிலாந்து சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கைது பயத்தை உண்டாக்கி நடுங்க வைத்திருக்கிறார்கள் அயலகத் தமிழர்கள். 6 கோடி தமிழகத் தமிழர்களால் முடியாததை 3 லட்சம் பிரிட்டன் தமிழர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவில் கொலைக்குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளசோடு இந்திய பிரதமரை சந்தித்து விருந்துண்ண முடிந்த ராஜபக்சேவால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றக் கூட முடியவில்லை.

ராஜபக்சேவின் இங்கிலாந்து பயணத்தின் போது தமிழர்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஒன்றுபட்ட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கூடவே இங்கிலாந்து தொலைக்காட்சியான சேனல் 4 வெளியிட்ட ஆவணங்கள் ராஜபக்சேவின் போர்க்குற்ற நடவடிக்கைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின. கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போய் வெள்ளையர்களே ராஜபக்சேவுக்கு எதிராக திரண்டிருக்கிறார்கள்.

“சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காட்சிகளைக் கண்ட வெள்ளையர்கள் கொந்தளித்துப் போனார்கள். மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்பளிக்கும் நாடாக இருக்கும் இங்கிலாந்தில் மகிந்தவின் கோரமுகத்தைப் பார்த்தவர்கள் எங்களோடு சேர்ந்து நின்று எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். மைனஸ் எட்டு டிகிரி என்கிற அளவிற்கு தட்பவெப்பம் இருந்ததால் சாலைகளில் ஒன்றரை அடி உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. அந்தக் குளிரிலும் குழந்தைகளோடு பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து ராஜபக்சேவுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கிலாந்தில் கொலைக்குற்றம் சாட்டி புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் புகார்கள் அடிப்படையில் ஆயிரக்கணக்கான எஃப்.ஐ.ஆர்.களும் பதிவாகியிருக்கின்றன. 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பிறகும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இனி ராஜபக்சேவும் அவருடைய சகோதரர்களும் ஐரோப்பிய நாடுகளில் கால் வைக்கவே முடியாது”- லண்டனில் புலிக்கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழ சகோதரர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக இப்படி கூறுகிறார்.

தமிழகத்தில் தன் சகுனி வேலையை சிறப்பாக செய்து முடித்த கையோடு இங்கிலாந்துக்கு போன இலங்கைத் தூதர் அம்சாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கிலாந்துக்கு போனால் எதிர்ப்பு வலுவாக இருக்குமே... கைது அபாயம் இருக்குமே என்றெல்லாம் பயந்த ராஜபக்சேவிடம், இங்கே தமிழர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்களால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ராணியும் நமக்கு ஆதரவாக இருக்கிறார் என்று அம்சா கொடுத்த ரிப்போர்ட்டை நம்பியே இங்கிலாந்தில் கால் வைத்தார் ராஜபக்சே. பிறகு வைத்த காலை எடுக்க முடியுமா என்கிற அளவிற்கு பயந்து நடுங்கிப்போனார் ராஜபக்சே.

ஏற்கனவே சிலி அதிபரை கைது செய்திருக்கிறது இங்கிலாந்து என்பதால் இந்த முறை போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் கைது செய்யவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டன. இங்கிலாந்தை பொறுத்த வரை போலீஸ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். அல்லது ராணி உத்தரவிட்டால் ஒருவரை கைது செய்யலாம் என்கிற சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ராஜபக்சே ஒரு நாட்டின் அதிபராக இருப்பதால் அவரைக் கைது செய்ய ராணி எலிசபெத்தின் உத்தரவு தேவையாக இருந்திருக்கிறது. அதனால் இந்த முறை கைதாவதில் இருந்து தப்பி விடலாம் ராஜபக்சே. ஆனால் அவர் மீதும் அவருடைய சகோதரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதிபராக இல்லாமல் இனி இங்கிலாந்தில் ராஜபக்சே குடும்பம் கால் வைக்க முடியாது. இதே நிலையை ஐரோப்பிய நாடுகள் முழுக்கவும் ஏற்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன தமிழர் அமைப்புகள்.

மோடிக்கு பதிலடி கொடுத்த காந்திநகர்! தேர்தல் ஷ்பெஷல்!!

காந்திநகர் : ’வைப்ரண்ட் குஜராத்’ என்ற பெயரில் மோடி நடத்திய கூத்துக்கு சரியான பதிலடி காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது.

அன்னா ஹஸாரே போன்றவர்கள் உண்மை நிலவரத்தை தெரியாமல் வளர்ச்சியின் நாயகன் என புகழ்ந்து தள்ளப்பட்ட மோடிக்கும் இத்தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கையாலாகததனத்தால் குஜராத் மாநிலம் 1995-ஆம் ஆண்டிற்கு பிறகு பா.ஜ.கவின் கைவசம் சென்றது. பின்னர் நரேந்திரமோடி பா.ஜ.கவின் முதல்வராக பதவியேற்றார். குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளில் பரவலாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான வெறுப்பு ஆழமாக விதைக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பை காரணங்காட்டி மோடி தலைமையில் சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்திய வரலாற்றிலேயே கொடூரமான தாக்குதலை நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமாக கொலைச் செய்தனர். பல பெண்கள் படுகொடூரமாக வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.

குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையை மறைக்க மோடி போட்ட திட்டம்தான் ‘வைப்ரண்ட் குஜராத்’. மோடியின் மோசடிக்கு உரிய பதிலடி தற்பொழுது காந்திநகர் மாநகராட்சி தேர்தலில்(GMC) கிடைத்துள்ளது.

மொத்தம் 33 சீட்கள் (11 வார்டுகள்- ஒரு வார்டுக்கு 3 சீட்கள்) கொண்ட இந்த நகராட்சியின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 18 இடங்களை வென்று நகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. பாஜகவுக்கு 15 இடங்கள் கிடைத்தன.

5 வார்டுகளில் காங்கிரஸ் மொத்த சீட்களையும் வென்றது. 7வது வார்டில் 2 சீட்களையும், 9வது வார்டில் 1 சீட்டையும் வென்றது காங்கிரஸ். குஜராத் காங்கிரஸ் தலைவராக முதல் முறை பொறுப்பேற்ற அர்ஜூன் மோத்வாடியாவுக்கு இது மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றியைக் குறித்து கருத்துத் தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹரி அமீன் கூறுகையில், “காந்திநகர் மக்கள் மோடி அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 2011 ஆம் ஆண்டை மாநில தலைநகரான காந்திநகரில் வெற்றிக்கொடியை ஏற்றிவிட்டு துவங்கியுள்ளது” என்றார். தேர்தல் முடிவுகள் குறித்து மோடி(கேடி) இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

நான் ரெடி! நீங்க ரெடியா? சினேகா!!

புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது.

தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

Thursday, April 21, 2011

பெண்கள் வாக்கு யாருக்கு? ஆணுக்கா! பெண்ணுக்கா!!

வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலிலும், 60, 65 சதவீதம் வரை பதிவாகும் ஓட்டுப்பதிவு, இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், 77.8 சதவீதமாக உயர்ந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், சராசரி ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ தாண்டியுள்ளது. இதனால், யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.

தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகளை பார்த்தால், மொத்தமுள்ள, 32 மாவட்டங்களில், ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களை தவிர, மீதியுள்ள 25 மாவட்டங்களில், 101 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.சில தொகுதிகளில், 100 ஓட்டுகள் முதல், அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 475 ஓட்டுகள் வரை, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில், 3,000 ஓட்டுகள் முதல், 4,000 ஓட்டுகள் வரை, ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.

குறிப்பாக பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டதற்கும், தி.மு.க., கூட்டணி தரப்பில் சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், பெண் வாக்காளர்களை, "கவனித்தது' ஆகியவை காரணமாக தான், பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டனர் என்பது அவர்களின் வாதம்.அ.தி.மு.க., கூட்டணியோ, "விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாக விழுந்துள்ளது' என கூறுகிறது. இரு அணியும், இருவேறு கருத்துக்களை கூறினாலும், பெண் வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, ஆண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 89 ஆயிரத்து, 916; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 951.திருவாரூர் தொகுதியில் கருணாநிதிக்கு, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 83 ஆயிரத்து, 292; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 633 ஆக பதிவாகியுள்ளது.

நோயற்ற வாழ்வுக்கு, காலம் தவறாத உணவு!

ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

எச்சரிக்கும், இனப்படுகொலையாளன்?

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை ராஜபக்சே அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன

Wednesday, April 20, 2011

அச்சத்தில் அஞ்சல் ஒட்டு!!!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாற்றினர். அதாவது சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சமாக 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அணுகக்கூடிய ஒரு வேட்பாளர், இந்த அரசு ஊழியர்களை மிரட்டி அல்லது தான் செய்த நன்மைகளைக் கூறி, அல்லது ஆட்சிக்கு வந்தால் கவனிப்போம் என்று எச்சரித்து, அல்லது பணம் பட்டுவாடா செய்து இந்த வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

பல தொகுதிகளில் சுமார் 1,000 வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடியவை என்பதில் சந்தேகமே இல்லை. பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுபவருக்கும் இரண்டாம் இடத்தில் இருப்பவருக்கும் வாக்கு வித்தியாசம் சுமார் 1,000 வாக்குகள் அளவில்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு தபால் வோட்டுகளை மே 13-ம் தேதி வரை அனுமதிப்பதன் மூலம், ஆள்பலம், பணபலம் உள்ள வேட்பாளர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் அன்றைய தினமே இதற்கான படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்யும்படி சொல்லியிருக்கலாம். அல்லது அதற்கு அடுத்த நாளே இவர்கள் அந்தந்த மையங்களில் இந்தத் தபால் வாக்குகளை அதிகாரிகள் முன்னிலையில் பெற்று, அங்கேயே வாக்குப் பதிவு செய்து, தபால் பெட்டியில் போடும்படி செய்திருந்தாலும் இத்தகைய மிரட்டல் புகார்களுக்கு இடம் ஏற்பட்டிருக்காதே!

கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல், இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கும் வாக்குகள் எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருக்கும் நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் சிந்தித்து, தபால் வாக்குகள் விஷயத்தில் நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும். தற்போது தபால் வாக்குப் பதிவுக்கான படிவங்களை அந்தந்த மாவட்டங்களில் விநியோகிப்பதன் மூலம், இவர்கள் அதனை வீட்டுக்குக் கொண்டு சென்று, பிறகு நிதானமாக பிறிதொரு நாளில் (மே 13 க்குள்) தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் போட்டால் போதும் என்கிற பழைய வழக்கம் முறையானதாக இருக்குமா?

பணபலமும், ஆள்பலமும் உள்ள வேட்பாளர் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் படிவத்திலும் தனக்கு வாக்குகள் பெற்று அவரது ஆட்கள் மூலம் மொத்தமாக கொண்டுவந்து, இதற்கான பெட்டியில் போட்டாலும் கேட்பவர் யார்? தேர்தலில் பணியாற்றியவர்கள் தங்கள் வாக்குகளை அச்சமின்றி, பலவந்தம் ஏதுமின்றி, தனிஅறையில் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து, அப்போதே பெட்டியில் போடச் செய்திருந்தால் என்ன? எங்கேயோ, ஏதோ இடிக்கிறதே... சந்தேகம் வலுக்கிறதே...??

கலக்கப்போவது யாரு! மே 7 ல்?

உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்த குருவி, சூர்யா நடித்த ஆதவன், கமல் நடித்த மன்மதன் அம்பு ஆகிய படங்களை தயாரித்தார். ஆனால் அவர் நேரடியாக தயாரித்த இந்தப் படங்களை விட அவர் உலகமெங்கும் வெளிட்ட படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா, மைனா, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் அகிய படங்கள் தான் அவருக்கு திரை உலகில் நல்ல பெயரை வாங்கித் தந்தது.

இந்தப் படங்கள் அனைத்தும் மாபெறும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் வெற்றிவிழாவை பிரம்மாண்டமான முறையில் கொண்டாட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவில் கௌரவிக்கப் படுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகளை வழங்குகிறார். மே மாதம் 7 ஆம் தேதி ( சனிக்கிழமை ) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினிகாந்த் தலைமையில் விழா நடைபெற இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கோ படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சூர்யா - ஸ்ருதிஹாஸன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு, உதயநிதி ஸ்டலின் - ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

கை கொடுக்குமா? கை விரிக்குமா?? காற்றலை!

தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை, காஸ், மரபுசாரா எரிசக்தி, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் பங்கு என, மொத்தம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் பெற முடியும். இதில், காற்றாலை மூலம், 4,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, கோவை உட்பட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில், காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் மே மாதம், தென்மேற்கு பருவக் காற்று, தீவிரமடையும். அப்போது காற்றாலைகள் மூலம், அதிகபட்சம், 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.கோடைக் காலம் துவங்கியதால், தமிழகத்தின் மின் தேவை அதிகரித்துள்ளது. சராசரியாக, 1,400 மெகாவாட் மின் பற்றாக்குறை இருப்பதால், சென்னை தவிர புறநகர் பகுதியில் தினமும், மூன்று முதல் ஐந்து மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது.

விவசாயத்துக்கு, 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கப் படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும், மின் பற்றாக்குறை நீடிப்பதால், மின்தடையை சமாளிக்க வாரியம் திணறுகிறது.கடந்த 14ம் தேதி, திடீரென தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததால், காற்றாலைகளில் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது, மின்வாரியத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், காற்றின் தீவிரம் குறைந்ததால், இரு நாட்களாக, 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. காற்றாலை மின்சாரம் மூலம், கோடைகால மின் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்பதால், தென்மேற்கு பருவக்காற்றை எதிர்பார்த்து மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் சிறந்த கிரிக்கட் கேப்டன்?

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர், இந்திய கிரிக்கட் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவருடைய சிறப்பான முயற்சியின் காரணமாக இந்திய அணி வெற்றிகளை குவித்தது. அணியை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்தினார்.

இந்திய அணிக்கு இதுவரை இருந்த கேப்டன்களிலேயே கங்குலி தான் சிறந்த கேப்டன். இப்போது டோனி தலைமையிலான அணியும் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இதற்கு கங்குலி அமைத்து கொடுத்த அடித்தளம் தான் முக்கிய காரணம்.

அதே வேளையில் கங்குலியை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்காதது குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. அணி நிர்வாகிகள் எடுக்கும் முடிவை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது.

கிரிக்கட் நிர்வாகத்தில் கிரிக்கட் வீரர்கள் இடம் பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்தது. கர்நாடக கிரிக்கட் சங்கத்தில் இருக்கும் வீரர்கள் செயல்பாடு பாராட்டும் படியாக இருக்கிறது. சச்சின் எவ்வளவு காலம் விளையாடலாம் என்பதை நாம் சொல்ல முடியாது. எல்லாம் அவருக்கே தெரியும். என அசாருதீன் தெரிவித்தார்.

ராஜபக்சேவின் கூலிப் (காலி) படைக்கு எதிராக!!

சென்னை : இலங்கையின் போர்க்குற்றம் குறி்த்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபட்ச அரசு போர்க் குற்றவாளி என தீர்ப்பளித்து சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டுமென்று கூறியது. இப்போது ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவும் ராஜபட்ச அரசு போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் சர்வதேச மனித நலச் சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த காலத்தில் ராஜபட்ச அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு உதவி செய்தது. ஆனால் இப்போது உலக அரங்கில் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்பது அம்பலமான நிலையில் இந்திய அரசு தன்னுடைய கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பதுடன் ஐ.நா.வுடன் இணைந்து நின்று ராஜபட்ச அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி 25-04-11 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை - பனகல் மாளிகைக்கு முன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளும் மற்றும் பல தோழமை அமைப்புகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன. தமிழர்கள் அனைவரும் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tuesday, April 19, 2011

எளிமையாகிறது இன்கம் டாக்ஸ்!

புதுடில்லி:ஐந்து லட்சரூபாய் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், தனியே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ”திர் சந்திரா தெரிவித்துள்ளார். வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

வருமான வரி கணக்கை எளிமையாக தாக்கல் செய்வதற்கு, வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றான, மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை, வரி செலுத்துவோரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாத ஊதியம் பெறு வோர் மற்றும் சிறு வணிகர்கள் மிக எளிதாக வருமான வரி செலுத்துவதற்கு வசதியாக 'சாஹஜ்' மற்றும் 'சுகம்' என்ற இரு வகையான வருமான வரிப் படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மின்னணு முறையில் இந்த விண்ணப்ப படிவங்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுதிர் சந்திரா மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா கூறியதாவது: ஐந்து லட்சரூபாய் வரை ஆண்டு வருவாய் பெறுபவர்களுக்கு, தனியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இந்த நடைமுறை, நடப்பு வரி மதிப்பீட்டு ஆண்டில் (2011-12) அமலுக்கு வருகிறது. கடந்த நிதியாண்டில் (2010-11) 5லட்சரூபாய் வரை ஆண்டு வருமானம் பெற்றவர்கள், இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அவர்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்பக் கோரும் பட்சத்தில், கண்டிப்பாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப வழங்கக் கோரி விண்ணப்பித்தவர்களுள், 85 லட்சம் பேருக்கு 78ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகையை விட 70 சதவீதம் (50 ஆயிரம் கோடி ரூபாய்) அதிக மாகும்.நடப்பு ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை 8 லட்சத்து 23 ஆயிரத்து 101 பேருக்கு 6,183 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 20ம் தேதிக்குள்(இன்று) 7 லட்சத்து 91 ஆயிரத்து 312 பேருக்கு, 4,000 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்படும். எஞ்சிய அனைத்து விண்ணப்பங்களுக்கும், இம்மாத இறுதிக்குள், உரிய தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர், கூடுதலாக செலுத்திய வரியை திரும்பக் கோரினால், அந்த விண்ணப்பங் கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் தொகை திரும்ப அளிக்கப்படும்.வரி செலுத்தியோருக்கு, மிக அதிக அளவில் பணம் திரும்ப வழங்கப் பட்டுள்ள நிலையிலும்,நேரடி வரி வசூல் 4.46 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை விஞ்சி 4.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுதிர் சந்திரா கூறினார்.

மக்களின் விழிப்புணர்வே? தேர்தல் ஆணையம்

புதுடில்லி : தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலை விட, தற்போது, 11 சதவீத ஓட்டுகள் அதிகமாக பதிவாகியுள்ளன. கேரளாவிலும் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் கமிஷன் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் காரணமாகவே, இது சாத்தியமாகியுள்ளது' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் கமிஷன் இயக்குனர் ஜெனரல் அக்ஷய் ரவுத் கூறியதாவது தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலை விட, இந்த தேர்தலில், 11 சதவீத ஓட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளன. கேரளாவிலும், கடந்த தேர்தலை விட, தற்போது, 4.21 சதவீதம் அதிக ஓட்டு பதிவாகியுள்ளது.தபால் ஓட்டுகள் இன்னும் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால், சதவீதம் மேலும் அதிகரிக்கும். அசாம், புதுச்சேரி மாநில தேர்தல்களிலும், இந்த முறை அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

இதற்கு முன், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், ஓட்டுப் பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்திருந்தது.ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை, மீடியாக்கள் மூலம், தேர்தல் கமிஷன் மேற்கொண்டது, மக்களின் விழிப்புணர்வு இதற்கு காரணம் இவ்வாறு அக்ஷய் ரவுத் கூறினார்.

தேர்தல் ஆணைய கட்டுப்பாடு! கலக்கத்தில் பொதுமக்கள்?

தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்படவில்லை. அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. "நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது புதிய சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடக் கூடாது' என்பது விதியாகும். இந்த விதியுடன் புதிய ரேஷன் அட்டையும் சேர்ந்து கொண்டுள்ளது. அதாவது, நடத்தை நெறிமுறைகள் அமலான காலத்தில் இருந்து அது முடியும் வரை புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் கொடுக்கக் கூடாது.

இதன்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நடத்தை விதிகளால் முடங்கியுள்ளன. இதுகுறித்து உணவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறுகையில், ""மார்ச் 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வீடுகளை மாற்றிக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் என பலரும் புதிய ரேஷன் அட்டையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நடத்தை நெறிமுûறையைக் காரணம் காட்டி புதிய அட்டையைக் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள மனுக்கள் தேங்கி உள்ளன.

மனுக்கள் சரியாக இருந்து, தளத்தணிக்கை முடிவுற்ற குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆணையம் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தினால் மட்டுமே அந்த அட்டைகள் கொடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

வீட்டு முகவரிக்கென பிரத்யேகமான தத்கால் ரேஷன் அட்டைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரேஷன் அட்டைக்கு பொருட்களை வாங்க முடியாது. வேறு ஊர்களுக்கு இருந்து சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வரும் குடும்பங்கள் தங்களது வீட்டின் முகவரிச் சான்றாக இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உணவுத் துறை அறிவித்து அது செயல்பாட்டில் உள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகையான அட்டைக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

பழங்களின் பயன்கள் (சிறந்த ஆண்டி பயாட்டிக்)

இன்றைய நவீன உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம். இந்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்கு அளித்த கொடை தான் காய்களும், கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

தேங்காய் நீர் இதயத்திற்கு ஊக்கம் அளிக்கும். நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும். இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம் மற்றும் மார்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவைகளுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.

Monday, April 18, 2011

தோழியுடன் ஊர்ப்பயணம் மேற்கொள்ளும்., ஜெயா?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா (19.04.2011) கொடநாடு எஸ்டேட்டுக்கு பயணமாகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 18 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

13ஆம் தேதி சென்னையில் ஓட்டு போட்டார். ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது. இந்நிலையில் அவர் நாளை கொடநாட்டுக்கு பயணமாகிறார். பகல் 12.40 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கோவை செல்லும் அவர் அங்கிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் உடன் செல்கிறார்.

இந்திய தேசத்திற்கு எதிரான, எதிரியான??

லக்னோ :‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் பிஜேபி-யின் லோக் சபா எம்.பியும் கோரக்நாத் பீத்தின் வாரிசுமான யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது.

இந்த குறும்படம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஹிந்துத்வா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளை வெளிக்கொணரும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

படம் திரையிட்ட பின் நடந்த விவாதத்தில் சமூக சேவகர் டாக்டர்.சந்தீப் பாண்டே கூறியதாவது; உத்திர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதை உத்திரபிரதேச அரசு கவனிக்க தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

யோகி ஆதித்யனாந்தும் அவரின் ஆதரவுடைய ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியும் தான் பல கலவரங்களுக்கும் படு கொலைகளுக்கும் காரணம் என தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறுகையில்; “இந்த குறும்படம் ‘காவிப்போர்‘ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர் செய்யக் கூடிய தீவிரவாதத்தை மட்டும் காட்டாமல் எவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களும், ஹிந்து சமுதாயத்தின் பெண்களும், குழந்தைகளும் தீவிரவாதத்தின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார்.

லக்னோ பல்கழைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாஜ்ஹியும், செயலாளரான பேராசிரியர் ரூப் ரேகாவர்மாவும் ஹிந்துத்வா தீவிரவாதம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியை அச்சுறுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர்.

அயோத்யாவை சேர்ந்த கிஷோர் ஆதித்யநாத் இறையாண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை பரப்புவதாக தெரிவித்தார். மேலும் இந்த குறும்படம் உண்மை நிலையை விளக்குவதாக உள்ளது எனவும் கூறினார்.

சொராஹ்புதீன் என்னும் முஸ்லிம் இளைஞர் சிறிது நாட்களுக்கு முன்னர் காலிலாபாத் செல்லும் வழியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியால் கொடூரமாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த காவிப்போர் குறும்படம் ஹிந்தியில் ராஜீவ் யாதவ், ஷாநவாஸ் மற்றும் லக்ஷ்மன் பிரசாத் ஆகியோரால் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

காவல் காக்க ஆணை? கலக்கத்தில் அதிகாரிகள்!!

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, தமிழக அதிரடிப்படை, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாவட்ட மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள், கூட்டுறவு இணைப்பதிவாளர், கால்நடை, விவசாயத்துறைகளின் இணை இயக்குனர்கள், ஊராட்சி உதவி இயக்குனர், பல துறைகளில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களை தினமும் சுற்றி வந்து கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு அதிகாரியும் காலை 8 முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 முதல் காலை 8 மணி வரையும் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடந்தால் அன்று பணியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பு என்பதால் கண்காணிப்பு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Sunday, April 17, 2011

ஆட்ட நாயகனுக்கு அபராதம்?

ஐ பி எல் ஆட்டத்தில் கொச்சி அணியும் மும்பை அணியும் வெள்ளியன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொச்சி டஸ்கர்ஸ் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணித்தலைவர் சச்சின் சதம் அடித்தும் அது வெற்றிக்கு உதவவில்லை. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லையாம் . குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி ஒரு ஓவர் வீச வேண்டி மீதம் இருந்தது. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன் அணியின் தலைவர் தெண்டுல்கருக்கு ரூ.9.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானத்திற்கு, மனப்பூர்வமான நன்றி! ஜப்பான்!!

டோக்கியோ : கடந்த மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட பலத்த சுனாமி பேரலைகளாலும், பூகம்பத்தாலும் ஏற்ப்பட்ட பாதிப்பில் 28,000 – கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததும், பலர் காணாமல் போனதும் உலக மக்கள் அனைவரையும் மறக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த பேரழிவால் ஸ்தம்பித்து போன ஜப்பான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் பல வழிகளில் செய்து கொடுத்தது, அதில் ஈரானும் தனது பங்கிற்கு பல மனிதாபிமான உதவிகளை ஜப்பானிற்கு செய்து மிக பெறும் சகோதரத்துவத்தை அந்நாட்டுடன் பெற்று உள்ளதாக ஜப்பானின், வெளியுறவு துறை அமைச்சர் சடோறு சடோ செய்தியாளர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

இப்பெரும் சம்பவத்திற்கு பிறகு ஈரான் அம்பாசிடரும் அவருடன் ரெட் கிரசன்ட் சொசைட்டியின் நால்வர் அடங்கிய குழுவும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக வந்து மிகவும் மதிக்கமுடியாத பல மனிதாபிமான உதவிகளை செய்து, ஜப்பானுக்கும் ஈரானுக்கும் இடையே நல்ல நட்புறைவை ஏற்படுத்தினர் என்றும், ஈரானும் வெகு நாட்களுக்கு முன்பு இதுபோல் ஒரு பாதிப்பால் பரிதவித்ததையும் நினைவு கூர்ந்தார்.

ஜப்பானில் 1923-ல் ஏற்ப்பட்ட பாதிப்பில் 142,000 -க்கும் மேற்ப்பட்டோர் தங்கள் வாழ்க்கையை இழந்த அந்த பெறும் பாதிப்பிற்கு பிறகு ஏற்ப்பட்ட மிகப் பெறும் அசம்பாவிதம் இது என்று சடோ வருத்தத்தில் ஆழ்தினார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!